02. உனக்காக நான் இருப்பேன்






கதிருக்கு தெரிந்தது எல்லாம் அந்த ராகவிக்கும் தன் அக்கா மாலினிக்கும் எப்போதுமே சுமூக உறவு இருந்தது இல்லை என்பது தான். 

என்ன விபரம்? என்றெல்லாம் அவன் அறிய வாய்ப்பில்லை.


அதனாலேயே அவன் தயங்க… 

விபரம் அறிந்த நளினியோ அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்து போய் தன் தங்கையை பார்த்தாள். 


கல் போல் இறுகி இருந்தது மாலினியின் முகம்.

ஏதும் பேசாமல் எழுந்து போய்விட்டாள். 


அன்றைய தினத்தின் இரவில் தம்பியின் அறையில்… 


ஒன்றுமே சொல்லாமல் எழுந்து போன மாலினியை குறித்து


நளினியின் மடியில் தலை வைத்து , 

“ அக்கா, ராகவிக்கும் அக்காக்கும் என்ன பிரச்சனை எனக்கு தெரியாது..  ஆனா மது ராகவி மாறி கிடையாதுக்கா. உங்க எல்லாருக்குமே அவளை ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை பேசி பாருங்களேன்” 


வருத்தப்பட்டு கூறி கொண்டிருந்த கதிருக்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தாள் நளினி.  

மனதில், ‘ உனக்கு மாலுவோட குணமும் மனமும் புரியாது கதிர்’ என்று எண்ணி கொண்டிருக்க


அப்போது அறையில் நுழைந்த மாலினி,


“ நாளைக்கு நான் மதுவை மீட் பண்ணனும் ஏற்பாடு பண்ணு. 

அவ கிட்ட நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு” என்று கூறி விட்டு நகர்ந்தாள்.


கதிர் அதிர்ந்து போய் நளினியை பார்த்தான்.


“ பயப்படாத, மாலினி ஒன்னும் கெட்டவ கிடையாது. பயப்படும் படி ஒன்னும் ஆகாது.”


“அதில்லைக்கா..  மது ரொம்ப பயந்த சுபாவம். கொஞ்சம் அதிர்ந்து பேசுனாலும் அழுதுடுவா… அதான்” அவன் தயக்கம் புரிய… 


“ சரி நாளைக்கு கிளினிக் முடிச்சு நானும் அங்க வரேன். போதுமா?”  என்ற பிறகே அமைதியானான்.


அதன் படியே இங்கு அவர்கள் கூடி இருக்க, 




மதுவை சமாதானம் படுத்தியவாறே வெளியே பார்த்தான். 


தான் வந்த ஆட்டோவை கட் பண்ணி கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் மாலினி. 


“ மது, சுனாமி கம்மிங்.. நான் போய் அதோ அந்த பக்கம் ஒளிஞ்சுக்கிறேன் ஏதாச்சும் பிரச்னைன்னா ஒரு குரல் கொடு..”


“உடனே வந்துடுவல்ல..” அழும் குரலில் இவள் கேட்க…


“ இல்ல.. அப்டியே குதிச்சு எஸ்கேப் ஆயிடுவேன்” என்றவாறு ஓடினான். 


மாலினி உள்ளே நுழையும் போதே மது அவளை பார்த்து எழ முயல அடையாளம் கண்டது போல் அவள் அருகில் போய் அமர்ந்தாள். 


“நீ தான் மதுவா?” முதல் குரலே இவளுக்குள் ஆட்டம் காண்பிக்க 


“ம்ம்ம்” என்ற முனகல் மட்டுமே வந்தது. 


சிறிது நேரம் அவளையே உற்று பார்த்த மாலினி பின்,


“ என்ன பண்ற?” என்றாள்.


“B.Sc. mathametics   முடிச்சிருக்கேன்” என்றாள்.


“ எவ்வளோ நாளா நடக்குது உங்க காதல் பாடம்?” 


“ இல்ல.. வந்து..” 


“ என்ன இல்ல வந்து… லவ் பண்றிங்க தானே...” மீண்டும் இவள் குரல் உயர்த்த…. 

மதுவிற்குள் பயம் உருண்டது.


வேகமாய் ‘ ஆம்’ என்று தலையாட்டி,

“ இப்போ தான் ரெண்டு வருஷமா” கம்மிய குரலில் கூறினாள். 


மீண்டும் அமைதி மாலினியிடம், 

“ எங்க அந்த நல்லவன்? உன்ன மட்டும் வர சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டானா?” இவள் கேட்க.. 


மது, “ அங்க..” என்று கை காட்டிய திசையில் பார்த்தாள். 


அவசரமாக மெனு கார்டினுள் தலையை கொடுத்தான் கதிர். 


“ அய்யோ போச்சு” 


சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் தலையை தூக்கி பார்க்க மாலினி கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள். 


மாட்டி கொண்ட தினுசில் அவன் ‘ஹிஹி’ என்று வழிய அவள் அவனை ‘வா’ என்று சைகை செய்தாள். 


அவனும் அவள் அருகில் செல்ல, 

“ இன்னும் எவ்வளோ திருட்டு வேலை தான்டா செய்வ?” பல்லை கடித்தாள். 


“ அய்யோ அக்கா, அப்டிலாம் இல்ல… இவளோட நீ தனியா பேசுனா நல்ல கம்யூனிகேஷன் ஆகும்னு தான் அங்க வெய்ட் பண்ணேன்… என்னை போய்???” அவன் சமாதானம் செய்தான்.


“ ஹாய், வந்து ரொம்ப நேரம் ஆச்சா? ஒர்க் முடிய லேட் ஆகிடுச்சு… சாரி” என்றபடி நந்தினி வந்து சேர்ந்தாள். 


‘ அப்பாடி தப்பிச்சேன்’ என்று கதிர் நீண்ட பெருமூச்சு விட அவன் மூச்சு காற்று பட்ட உஷ்ணத்தால் அவனை முறைத்தாள் மாலினி. 


“ ஏண்டி வந்ததுல இருந்து இப்படி தான் உர்ருன்னு இருக்கியா… பாவம் பசங்க… 

கொஞ்சமாச்சும் சிரிடி” நளினி கூற அவளையும் சேர்த்து முறைத்த மாலினி


“என் மூஞ்சியே இப்படி தான்” என்று மெனு கார்டை கையில் எடுத்தாள். 


“ எனக்கு ஆரஞ்சு ஜூஸ்… உங்களுக்கு?”  மற்றவர்களிடம் கேட்க, 


“ எங்களுக்கும் அதே..” என்ற பிறகு ஆர்டர் கொடுத்தாள். 


“ உங்க வீட்ல அம்மா அப்பாலாம் எப்படி?  உங்க காதலுக்கு எந்த எதிர்ப்பும் வராதே?

ஏன் கேக்குறேனா?


இனி தான் எங்க அப்பா அம்மா கிட்ட விஷயத்தை கொண்டு போகணும். 

பெருசா எந்த எதிர்ப்பும் இல்லனாலும்… கொஞ்சம் கோவம் வரும். 

அதும் பெரியவங்க இருக்கும் போது சின்னவங்களா சேர்ந்து ஒரு விஷயம் பண்ணும் போது கோவம் வரது சகஜம். 

அதை எப்படி கொண்டு போறதுன்னு ஒன்னும் யோசிக்கல…

அதான் கேட்டேன்”  நளினி கூற


“ எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் வராது அண்ணி. ஏற்கனவே அக்கா லவ் மேரேஜ்ன்றதால இப்போவும் அப்பா அம்மா சம்மதிக்க நிறைய சான்ஸ் இருக்கும். சோ , என் சைட்ல எந்த பாதிப்பும் இருக்காது. 

எனக்கு வேண்டியது உங்க  எல்லாருடைய சம்மதம்… 

இவனுக்கு மட்டும் என்னை பிடிச்சா போதாது. உங்க எல்லாருக்கும் என்னை பிடிக்கணும்…” எதார்த்தமாக அவள் கூறினாலும், 


அவள் கூறிய ‘ அக்கா’ என்ற சொல்லிலேயே முகம் கருத்த மாலினி ஏதும் பேசாமல் தன் செல்லை நோண்டினாள். 



“ எங்க ஸ்டேட்டஸ் உங்க அளவுக்கு பெரிசு கிடையாது. 

நாங்க ரொம்ப வசதி கம்மியானவங்க உங்களோட ஒப்பிடும் போது. 

அதனால் எந்த இடைஞ்சலும் இல்லையே..”  மாலினி தான் கேட்டாள்.


“ அக்கா…..” கதிரின் குரல் கோவமாக இடையிட்டது. 


‘ மதுவை போய்  தரம் பார்த்து பழகுபவளாய் மாலினி எண்ணி விட்டாளே’ என்று அவன் மனம் குமைந்தது. 


மதுவுமே மாலினியின் கேள்வியில் மனம் சுணங்கினாள்.


ஆனால் வெளியில் எதையும் காட்டாமல் அமைதியாக இருக்க… 


மாலினியை தான் மதுவின் அமைதி சுட, 

தலையை கவிழ்ந்தாள். 


ஆனால் அவள் மனம் இருக்கும் நிலை நளினி மட்டுமே அறிந்த ஒன்று என்பதால் அவள் கையை ஆதுரமாய் பற்றினாள். 



மாலினிக்கும் நளினிக்கும் இடையில் இருந்த அந்த தனியமைதி புரியாமல்


‘என்ன?’ என்று பார்வையில் கதிரிடம் மது வினவ, 


அவனும்  ‘ தெரியல’ என்று தோளை குளுக்கினான். 


மீண்டும் மதுவே,

“ இவனுக்கு மட்டும் இல்ல அண்ணி   உங்களுக்கும் … 

உங்களுக்கும் பிடிக்கணும்… இல்லனா எங்களுக்கு கல்யாணம் வேணாம்” என்று மாலினியிடம் கூறினாள். 


சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக தன் ஜூஸை பருகியவள்,



“ கதிரை கொஞ்சம் மரியாதையா கூப்பிடவும் பழகிக்கோ..

எங்களுக்கு ஒன்னுமில்ல.. பெரியவங்க இப்படி நீ இவனை பேர் சொல்லி கூப்டுறதை  பார்த்தா சங்கட படுவங்க” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டாள். 


‘என்ன சொல்லிவிட்டு செல்கிறாள் இவள்?’ 

ஆக தன் விருப்பத்தை மறைமுகமாக ஒப்பித்துவிட்டு 

போய் கொண்டிருக்கும் மாலினியை மூவரும் பார்த்த வண்ணம் இருக்க, 

மது நளினியிடம்,



“ ராகவிக்கும் இவங்களுக்கும் சண்டைன்னு தெரியும்… 

ஆனா அது வெறும் காலேஜ் படிக்கிற வயசுல ஒருத்தர் மேல வரக்கூடிய சின்ன சண்டைன்னு நினைச்சேன்… 

ஆனா இப்போ இவங்கள பார்த்தா!!!

அக்கா பேர் கேட்டாலே இவ்வளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு என்ன ப்ராப்ளம்? 

உங்களுக்கு தெரியுமா அண்ணி?”  என்று கேட்டாள். 


அதற்கு நளினியிடம் அமைதியே பதிலாய் கிடைக்க, 


அக்காவின் இயல் குணம் அறிந்தாதலோ ஏனோ?,


“ என்னால முடிஞ்சது பண்ணி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ட்ரை பன்றேன் அண்ணி.

நிச்சயமா சொல்வேன் தப்பு அக்கா பேர்ல தான் இருக்கும்னு… அதான் என்னால முடிஞ்சதை…” கூற வந்தவளை நளினியின் குரல் இடையிட்டது.


“ உன்னால மட்டும் இல்ல… யாராலயும் சரி பண்ண முடியாது. 

ஆமா, நீ சொல்றது சரி தான் . 

தப்பு உன் அக்கா பேர்ல தான். 

அதனால இவ மனசளவுல ரொம்ப காயம் பட்டுட்டா… 

அந்த காயத்தை, நீயோ? 

இல்ல உன் அக்காவோ?

இல்ல உன் அக்காவோட கணவரோ? 

யார் நினைச்சாலும் குணமாக்க முடியாது. 

அவளே மாறுனா தான் உண்டு” 


நிச்சயமாய் நளினியிடம் இருந்து இப்படி ஒரு கோபத்தையும்… 

பதிலையும் எதிர்பார்க்கவில்லை மது. 


அதிர்ந்த முகத்தோடு அவள் நளினியை பார்க்க கதிர்,

“ அக்கா என்ன சொல்லுற?” என்றான் புரியாமல்… 


“ அண்ணி, வசந்த் அத்தான் பத்தி… புரியல… நீங்க சொல்லுறது…”  ஏதேதோ கற்பனை ஓட,

பயந்த மனதை அடக்கி கொண்டு கேட்டாள். 


“நீ நினைக்கிற மாதிரி இது வெறும் சாதாரண சண்டை இல்ல.  


  ராகவி, இவ கிட்ட இருந்து பறிச்சது?

பேனாவோ பேப்பரோ பொன்னோ பொருளோ இல்ல…  

அவளோட மனசை… காதலை… அவளோட வசந்த்தை… 

ஆமா.. உன் அத்தான் வசந்த் தான்…


இப்போ கொஞ்சம்  முன்னாடி நீ சொன்னியே, 

“ உங்களுக்கு பிடிக்கலான இந்த கல்யாணம் வேணாம்”ன்னு… 

அதை சொல்லும் போதே உனக்கு வலிச்சதை உன் முகம் காட்டுச்சு..

அந்த காதலோட வலிய தான் காலமும் அனுபவிச்சுட்டு இருக்கா என் தங்கை…” என்று கூற எதிர் இருவரும் அதிர்ந்தனர்.


Post a Comment

0 Comments