15. என் உள்ளம் உன் வசம்



அன்றைய மதிய உணவு நேரம்:

தோழியர் கீர்த்தனா, ப்ரியா, பவித்ரா மூவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்த சமயம், சங்கர் அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.

சில நாட்களாகவே அவன் பார்வையில் மாற்றம் கண்ட கீர்த்தனா, அவனிடம் தனிப்பட்ட பேச்சை தவிர்த்து வந்தாள்.

இப்போது எல்லார் முன்பும் வந்து அவன் அப்படி அமர இவள் என்ன செய்வது என்று முழித்தாள்.

இவற்றை விட,

' இவன் ஏதாவது ஏடாகூடமாக சொல்ல போய், அது தங்கள் நட்பு வட்டத்தில் சிக்கலை உண்டாக்கி விட கூடாதே ' என்ற எண்ணம் வேறு.

“ ஹாய், கீர்த்தனா”

அங்கு எல்லாரும் இருக்க அவன் அவளிடம் மட்டும் ஹாய் சொல்லியது ப்ரியாவிற்கு சந்தேகத்தை கிளப்ப அவள் நெற்றி சுருங்க கீர்த்தனாவை பார்த்தாள்.

' போச்சு போச்சு கண்டு பிடிச்சுட்டா ' தனக்குள் கூறி கொண்டாள் கீர்த்தனா.

ஆனால் பவியோ,

“என்ன சங்கர் உன் கண்ணுக்கு இங்க கீர்த்தி மட்டும் தான் தெரியுறால?”

  அவளிடம் ஒரு சிரிப்பை வழங்கியவன் கீர்த்தனா பக்கம் திரும்பி

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் கீர்த்து, எப்படி பேசுறதுனு தான் தெரியல? ஆனா பேசாம இருக்கவும் முடியல. அதான் இன்னக்கி எப்படியாச்சும் சொல்லிடலாம்னு வந்தேன்”

அவனின் பீடிகையில் பவியும் இப்போது ஒரு மாதிரி பார்வையை கீர்த்தனா பக்கம் வீச தொடங்கினாள்.

ஆனால் அதை சங்கர் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

“ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு கீர்த்தனா. வில் யூ மேரி மீ?”

அவன் தயங்கியபடி கேட்க , தோழியர் இருவரும் கீர்த்தனாவை அதிர்ந்த பார்வை பார்த்தனர்

' ஏய், சொன்னது அவன்... லுக் என் கிட்டயா' மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள்.

படிக்கும் சமயங்களில் இது போன்ற பலவற்றை அவள் சந்திக்க வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் எதிரில் இருப்பவரை கட் அண்ட் ரைட்டாக பேசி விடுவாள். ஆனால் இப்போது எதிரில் இருப்பவனோ தனக்கு ஒரு வகையில் நண்பன்.

கார்த்திக்கின் P.A வாக அவள் வேலையில் சேர்ந்த சமயம் தனக்கு தெரியாதவற்றை விக்னேஷ் -இன் P.A வான சங்கர் தான் கற்று கொடுத்தான். ஒரு வகையில் பார்த்தால் அவன் தனக்கு குரு போல. அவனிடம் கடுமையாய் பேச மனமில்லை. இருந்தாலும் வரவழைத்து கொண்ட தைரியத்துடன்,

“வாட் நான்சென்ஸ், சங்கர் எனக்கு உங்க மேல அப்படி எந்த ஒரு எண்ணமும் வந்ததில்லை”

வாடிய முகத்துடன் சங்கர் தலையை குனிந்து கொண்டான்.

“ excuse me” என்று அவசரமாய் ரெஸ்ட் ரூம் பக்கம் ஓடினாள் கீர்த்தனா.

சிறிது மூச்செடுத்து கொண்டவன் அங்கிருந்து நகர போகையில் அவன் செல் சிணுங்கியது.

“ சாரி சங்கர். எனக்கு எப்பவும் உங்க கிட்ட ஒரு நல்ல நட்பு இருக்கு. எனக்கு இப்போ வேற வழி தெரியல. கொஞ்ச நேரம் நான் என்ன சொன்னாலும் பதில் பேசாம அமைதியா இருங்க. சில உண்மைகள் வெளி வர வேண்டி இருப்பதால் தான் அப்படி கடுமையாக பேச வேண்டியதாகி விட்டது. மீண்டும் மன்னித்து கொள்ளுங்கள்.”

கீர்த்தனாவின் இந்த குறுஞ்செய்தி அவனின் நெற்றி பொட்டை சுருங்க வைத்தது.

நீண்ட ஆசுவாச மூச்செடுத்து கொண்டு வெளியே வந்தவள்,

இன்னும் கிளம்பாமல் அங்கேயே அமர்ந்திருந்த சங்கரை பார்த்து,

“என்ன சங்கர்? ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா? ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க. நீங்க எத்தனை முறை கேட்டாலும் என் பதில் நோ தான்.”

அவளின் குறுஞ்செய்தியும் இப்போது அவள் பேசும் பேச்சும் ஒன்றுக்கு ஒன்று முரண் பட,

“ இல்லை நீ நடிக்குற. உனக்கு என்னை பிடிக்கும்.இல்லனா அப்படி… உனக்கு என்கிட்ட எதும் பிடிக்கலனா சொல்லு அதை மாத்திக்குறேன் ” ஏதோ கூற வந்தவனை

‘ அச்சச்சோ காரியத்தை கெடுத்தான் போ ' என்று அவசரமாய் இடை புகுந்தாள்.

“ அய்யோ சங்கர் சொன்னா புரிஞ்சுகோங்க. எனக்கு வேற ஒருத்தரை பிடிக்கும். என் மனசில் எப்பவுமே என் அத்தை மகனுக்கு மட்டும் தான் இடம். அதனால் இப்படி பிணாத்தாமல் உங்க வேலையை போய் பாருங்க” அவசரமாய் கூறியதால் என்ன கூறுகிறோம் என்று அறியாமல் கூறி விட்டாள். இருந்தும் அதற்கு மேலும் நின்று பேசி கொண்டிருந்தால்…

சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டத்திற்கு தன்னை பற்றி தானே தவளை வாயால் உலரி விடுவோம் என்று தோன்ற அங்கிருந்து நகர்ந்தாள்.

கீர்த்தனா கூறிய “ அத்தை மகன்” என்ற வார்த்தையையே நினைத்து கொண்ட சங்கர் அமைதியாக நகர்ந்தான்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ப்ரியா, அமைதியாக பவித்ராவை அழைத்து சென்றாள். இதை கண்ட கீர்த்தனா ,

' அமுக்குனி ஏதாவது வாயை திறந்து சொல்றாளா பார்' என்று எண்ணி கொண்டாள்.

ப்ரியாவிற்கு சங்கரின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. கலகலவென பேசும் அவளிடம் பத்தில் ஒன்பது பேர் வழிவதற்கு என்றே வருவார்கள். ஆனால் சங்கரின் , 'பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்கும் குணம்' அவளுக்கு அவனிடம் ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நாளடைவில் தன்மையாக பேசும் அவனின் குணம் எப்போது அவளுக்குள் காதலை கொண்டு வந்திருந்தது என்பதை அவள் அறியவில்லை. தினமும் அவனை ரசனையோடு பார்க்க வைத்தது.

அவளின் கண்களில் தெரிந்த காதலை முதலில் கீர்த்தனாவே கண்டு கொண்டாள். அவளும் அந்த நோயை கடந்து வந்தவள் தானே, சுலபமாய் அவளால் ப்ரியாவின் மனதை உணர முடிந்தது. அவளாக போய் பேசுபவளாய் தெரியவில்லை. அதனால் தான் இந்த அடக்கு முறை.

கீர்த்தனாவின் எண்ணம் போல், தொடர்ந்த இரு நாட்கள் தன்னிடம் பேசுவதை ப்ரியா பேசுவதை தவிர்ப்பதை குறித்து கொண்டாள்.

' அழுத்தக்காரி, வாயை திறந்து ஏதாச்சும் பேசுறாளா பார் ' எப்போதும் போல் மனதிற்குள் நினைத்து விட்டு வேலையில் தன்னை இழுத்து கொண்டாள்.


Post a Comment

0 Comments